Jain Buddhist
தேவாரம் - முதல் திருமுறை
1. திருப்பிரமபுரம்
- நட்டபாடை
10.
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர்
கள்வன்-
“மத்தயானை மறுக, உரி போர்த்தது
ஒர்மாயம் இது!” என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
பொ-ரை: புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற
சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு
ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிய,உலகனைத்தும்
சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை
மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு
செய்து, பித்தனாய்
விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
2. திருப்புகலூர் -
நட்டபாடை
21.
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள்
அல்லாக்
கைதவத்தர், மொழியைத்
தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.
பொ-ரை: எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர்
சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான
தவத்தைச் செய்யும் மெய்யடியார் களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர்
கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை
எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.
3. திருவலிதாயம் -
நட்டபாடை
32.
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர்
சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.
பொ-ரை: வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப்
பெரியோர்கள் பேணுவர். மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய
புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக்
கொள்ளாதீர். குற்றம் தீர,
அடியவர்கட்கு
அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம்
உடையவர்களே, அடியார்கள் என
விரும்பப்படும் பெரியோர் ஆவர்.
4. திருப்புகலியும், திருவீழிமிழலையும்
(வினா உரை) - நட்டபாடை
43.
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி
நிலாவிய புண்ணியனே!
எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?
பொ-ரை: தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும்
பான்மையோடுகூடச் சமணரும்,
புத்தரும் அலர்
தூற்ற, அழகிய குளிர்ந்த
புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ்வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய
இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த
திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி
- நட்டபாடை
53.
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை
உண்டே, உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம்
அல்லகண்டீர்;
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை
காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!
பொ-ரை: நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சிவேளையில்
வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர், இடையில்
உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத் தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச்
சென்று வண்டு அமரும் மலர்க்கொன்றை புனைந்த வார் சடையோன் கழல்களை ஏத்தி
வாழ்த்துவோம்.
6. திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும்
(வினாஉரை) – நட்டபாடை
63.
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார்
தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி
அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
பொ-ரை: மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை
அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத்
தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத் திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற
செங்காட்டங்குடியில் மான் தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க்
கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
7. திருநள்ளாறும், திருஆலவாயும்
(வினாஉரை) – நட்டபாடை
74.
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு
எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
பொ-ரை: ஓலைத் தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும்
சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந் நெறியாகிய
சைவசமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு
நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும்
பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக்
கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
8. திருஆவூர்ப்
பசுபதீச்சுரம் - நட்டபாடை
85.
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு
சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த
சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
பொ-ரை: பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள்
சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின்
சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி
படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம்
ஒன்றிப்பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
9. திருவேணுபுரம் –
நட்டபாடை
95.
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.
பொ-ரை: அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர்
கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை
வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும்
அல்குலையும், உடுக்கை போன்ற இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம்
குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம்
ஆகும்.
10. திருஅண்ணாமலை –
நட்டபாடை
106.
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது
குணமே!
பொ-ரை: உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில்
நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால்
மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க
நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர்.
திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்
கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலானகுணம்.
11. திருவீழிமிழலை –
நட்டபாடை
117.
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.
பொ-ரை: மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும்
மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற்குணங்கள்
இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு
வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான
தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும், பசுமை
நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற
மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை
அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.
21. திருச்சிவபுரம் -
திருவிராகம் நட்டபாடை
226.
"குணம் அறிவுகள்
நிலை இல, பொருள் உரை மருவிய
பொருள்களும் இல,
திணம்" எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன்
உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.
பொ-ரை: குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப்
பொருள்களும், உரைக்கும்
உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின. இது திண்ணம் எனவும், கணபங்க வாதம்
புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில்
நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில்
நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைபவர் அழகிய உருவோடு விளங்குவர்.
22. திருமறைக்காடு -
திருவிராகம் நட்டபாடை
237.
இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்
முயல்பவர், துவர்படம் உடல்
பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.
பொ-ரை: உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத்
தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி
தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய
கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும், துவராடையால் உடலை
மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில்
சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.
23. திருக்கோலக்கா -
தக்கராகம்
248.
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.
பொ-ரை: நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும்
சமணரும், தம் உடலிற்
பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய
நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாத கோலக்கா
இறைவனைப் பற்றிப் போற்றப் பாவம் தீரும்.
24. சீகாழி –
தக்கராகம்
259
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கு முரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.
பொ-ரை: தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை
ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக
உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில்
நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.
25. திருச்செம்பொன்பள்ளி
– தக்கராகம்
270
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே.
பொ-ரை: அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும்
உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய
அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற
அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.
26. திருப்புத்தூர் -
தக்கராகம்
281
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் றிருப்புத்தூர்
ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.
பொ-ரை: மேல் ஆடையைப் போர்த்துத் திரிதலைத் தொழிலாகக் கொண்ட
பௌத்தர் சமணர் ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த்
திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும், ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய அவரைத்
தெளிமின்.
27. திருப்புன்கூர் –
தக்கராகம்
292
குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.
பொ-ரை: கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து
பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை
விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண
வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு
விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.
28. திருச்சோற்றுத்துறை
- தக்கராகம்
303.
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.
பொ-ரை: நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய
சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர்
கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை
நாம் சென்றடைவோம்.
29. திருநறையூர்ச்
சித்தீச்சுரம் – தக்கராகம்
314
மெய்யின் மாசர் விரிநுண் டுகிலிலார்
கையி லுண்டு கழறு முரைகொள்ளேல்
உய்ய வேண்டி லிறைவன் னறையூரில்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
பொ-ரை: உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக்
கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று
வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.
30. திருப்புகலி –
தக்கராகம்
325
உடையார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக்
கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே.
பொ-ரை: கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும்
புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக்
கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.
31. திருக்குரங்கணில்முட்டம்
– தக்கராகம்
36
கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக் கவைகொள்ளேல்
குழுமின் சடையண் ணல்குரங் கணின்முட்டத்
தெழில்வெண் பிறையா னடிசேர் வதியல்பே.
பொ-ரை: தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும்
புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக்
கொள்ளாதீர். மின்னல்திரள் போலத்திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச்
சென்று வணங்குவதே நம் கடமையாகும்.
32. திருஇடைமருதூர் –
தக்கராகம்
347
சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ.
பொ-ரை: சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித்
திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது
துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரிநதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம்
இதுதானோ?
33. திருஅன்பில்
ஆலந்துறை – தக்கராகம்
358
தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே.
பொ-ரை: தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான
கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச்
சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார்
அன்பிலாலந்துறை இறைவராவார்.
34. சீகாழி-
தக்கராகம்
369
சமண்சாக் கியர்தா மலர்தூற்ற
அமைந்தா னுமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
பொ-ரை: சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமையம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே
தியானித்து, மலர் தூவித் தொழுதலே சிறந்த தொண்டாகும்.
35. திருவீழிமிழலை –
தக்கராகம்
380
துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
பொ-ரை: தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய
அமணர் தேரர் ஆகியோரின் சமயத்தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள்
சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.
36. திருஐயாறு –
தக்கராகம்
391
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.
பொ-ரை: துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய
தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.
37. திருப்பனையூர் –
தக்கராகம்
402
அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.
பொ-ரை: அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும்
வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர்
பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.
38. திருமயிலாடுதுறை –
தக்கராகம்
413
நின்றுண் சமணுந் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.
பொ-ரை: நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த
புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியவாதவர்களாய் ஒழியத்தான் உயர்ந்த வெற்றி அருள்
இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.
39. திருவேட்களம் –
தக்கராகம்
424
அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர்
யாதுமல்லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லாற்
புறனுரையாதொன்றுங் கொள்ளேல்
முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச
மூரிவல்லானையி னீருரிபோர்த்த
வித்தகர்வேத முதல்வர்
வேட்கள நன்னகராரே.
பொ-ரை: செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த
பௌத்தர்கள், சமண் குண்டர்கள்
ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப்
புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர்.முத்துப் போன்ற வெண்
முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும்
வேத முதல் வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.
40. திருவாழ்கொளிபுத்தூர்
– தக்கராகம்
435
குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற்
கொள்கையினார் புறங்கூற
வெண்டலையிற்பலி கொண்டல்
விரும்பினையென்று விளம்பி
வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக
மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கண் மாமலர்தூவத்
தோன்றிநின்றானடி சேர்வோம்.
பொ-ரை: கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு
வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள்
மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய
வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக்
காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.
41. திருப்பாம்புரம் –
தக்கராகம்
446
குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங்
குற்றுவிட்டுடுக்கையர் தாமுங்
கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங்
கையர்தாமுள்ளவா றறியார்
வண்டுசேர்குழலி மலைமகணடுங்க
வாரணமுரிசெய்து போர்த்தார்
பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார்
பாம்புர நன்னகராரே.
பொ-ரை: திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய
சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச் சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி
பேசிக்கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள்
மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப்
போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.
42. திருப்பேணுபெருந்துறை
– தக்கராகம்
457
குண்டுந் தேருங் கூறைக ளைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்குபெ ருந்துறை யாரே.
பொ-ரை: இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும், தேரர்களாகிய
புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி
வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண்தவம்
புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை
விரும்புமின். யோக தண்டம்,
பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை
ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும்
நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.
43. திருக்கற்குடி –
தக்கராகம்
468
மூத்துவ ராடையி னாரும்
மூசு கடுப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள்
நயமில ராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர்
இறைஞ்ச வவரிட ரெல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
கற்குடி மாமலை யாரே.
பொ-ரை: காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப்
பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய்
நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி
உயரும் பக்தர்களும், சித்தர்களும்
வணங்க அவர்கட்கு வரும்
இடர்களை அகற்றிக் காத்தவர், அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடி மாமலை
இறைவர்.
44. திருப்பாச்சிலாச்சிராமம்
– தக்கராகம்
479
நாணொடுகூடிய சாயினரேனு
நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையாலுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சிலாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப்
புனைசெய்வதோ விவர்பொற்பே.
பொ-ரை: நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித்
திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு
அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச் சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ள வேண்டா.
அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட
திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச் செய்து பழிப்புரை கொள்ளல்
இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
45. திருஆலங்காடு –
தக்கராகம்
491
போழம்பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல்வினைபோகக் கேட்பிப்பாருங் கேடிலா
ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.
பொ-ரை: மாறுபட்ட சொற்களைப் பேசியும், காலத்துக்கு
ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை
உபதேசங்களாகக் கூறுபவரும்,
யானைத் தீ வரும்
அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச்
சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச்
செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
46. திருஅதிகைவீரட்டானம்
– தக்கராகம்
502
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே.
பொ-ரை: அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித
மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள், ஆடையற்றுத்
திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதரர். மணம் கமழும்
மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை
வணங்குங்கள்
47. திருச்சிரபுரம் –
பழந்தக்கராகம்
513
புத்தரோடு சமணர்சொற்கள்
புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து
மங்கையொடும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச்
சிரபுர மேயவனே.
பொ-ரை: மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து
உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே!
புத்தர்கள் சமணர்கள் ஆகியபுறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர்
வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.
48. திருச்சேய்ஞலூர் –
பழந்தக்கராகம்
524
மாசடைந்த மேனியாரு
மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த வூணினாரு
நேசமிலாததென்னே
வீசடைந்த தோகையாட
விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ்
சேய்ஞலூர் மேயவனே.
பொ-ரை: வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும், மணம் கமழும்
பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய
இறைவனே! அழுக்கேறிய உடலினரும், மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக்
கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?
49. திருநள்ளாறு –
பழந்தக்கராகம்
535
மாசுமெய்யர் மண்டைத் தேரர்
குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி
மும்மதிளும் முடனே
நாசஞ்செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.
பொ-ரை: அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய
குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி
அவர்கள் சமயங்களைச் சாராதீரர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர்
மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்
பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.
50. திருவலிவலம் –
பழந்தக்கராகம்
546
பொதியிலானே பூவணத்தாய்
பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
வலிவலமே யவனே.
பொ-ரை: திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம்
என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி
செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள்.
அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.
51. திருச்சோபுரம் –
பழந்தக்கராகம்
557
புத்தரோடு புன்சமணர்
பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த
பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை
போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே
சோபுரமே யவனே.
பொ-ரை: மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து, நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப்பாம்பைச்சூடியவனே! திருச்சோபுரம்
மேவிய இறைவனே! புத்தர்களும், சமணர்களும்
பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரிதலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ?.
52. திருநெடுங்களம் –
பழந்தக்கராகம்
568
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந்
தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால்
தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே.
பொ-ரை: கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது
வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம்
கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும்
அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.
53. திருமுதுகுன்றம் –
பழந்தக்கராகம்
578
உறிகொள்கையர் சீவரத்த
ருண்டுழன்மிண் டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே
நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
பொங்குவிடத் தையுண்ட
முறிகொண்மேனி மங்கைபங்கன்
மேயதுமு துகுன்றே.
பொ-ரை: குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும்
ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள்தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான்
மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.
54. திருஓத்தூர் –
பழந்தக்கராகம்
589
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சரீ வன்கழல் சேர்மினே.
பொ-ரை: கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய்
மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.
55. திருமாற்பேறு –
பழந்தக்கராகம்
599
தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.
பொ-ரை: ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள்
விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.
59. திருத்தூங்கானைமாடம்
– பழந்தக்கராகம்
643
பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகடீர்ந்த பொய்ம் மொழிகள் தேறவேண்டா
திருந்திழையுந் தானும் பொருந்திவாழும்
துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
பொ-ரை: பெரும்பசி நலிய, நோய்கள்
வருத்துவதால். பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர்
தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத்
துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத்
தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்
கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.
61. திருச்செங்காட்டங்குடி
– பழந்தக்கராகம்
665
செடிநுகருஞ் சமணர்களுஞ்
சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே.
பொ-ரை: முடைநாற்றத்தை
நுகரும் சமணர்களும், காவியாடை கட்டிய
புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு
அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும்
சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய
தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
62. திருக்கோளிலி –
பழந்தக்கராகம்
676.
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.
63. திருப்பிரமபுரம் –
பல்பெயர்ப்பத்து
686
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மை யிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வாயானலம் வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச்சண்பை யமர்ந்தவனே.
பொ-ரை: உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கி
ஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?
65. காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் – தக்கேசி
710
உண்டுடுக்கை யின்றியேநின்
றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார்
கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை
சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் டீரநல்கும்
பல்லவ னீச்சரமே.
பொ-ரை: அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத்
திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு
தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு
அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய
பல்லவனீச்சரமாகும்.
66. திருச்சண்பைநகர் –
தக்கேசி
720
போதியாரும் பிண்டியாரும்
புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளு
நிமல னிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின்
மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர்
சண்பை நகராரே.
பொ-ரை: அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பை நகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ்
மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.
67. திருப்பழனம் –
தக்கேசி
731
கண்டான்கழுவா முன்னேயோடிக்
கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல்
லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேனறவ
மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும்
பழன நகராரே.
பொ-ரை: வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய
மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழன
நகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று
கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக் கேளாத அடியவர்கள்
பாராட்ட விளங்குபவராவார்.
68. திருக்கயிலாயம் –
தக்கேசி
741
விருதுபகரும் வெஞ்சொற்சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரு மொழியைக்கொள்ளார்
புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால்
இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங்
கயிலை மலையாரே.
பொ-ரை: தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை
கொள்ளும் இயல்புடைய கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிற
சமயத்தவரோடு சண்டையிட்டுக் கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார்பால்
இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம் பெருமையை நினைந்து போற்றும் இயல்பினராய்
விளங்குபவர் கயிலைமலை இறைவர்.
69. திருஅண்ணாமலை –
தக்கேசி
752
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழுமின்கள்
வட்டமுலையா ளுமையாள்பங்கர்
மன்னி யுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும்
அண்ணா மலையாரே.
பொ-ரை: தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலை மயிரை
ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின்
சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின்
பங்கராய், மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய்
வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி
உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.
70. திருஈங்கோய்மலை –
தக்கேசி
763
பிண்டியேன்று பெயராநிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு
மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா
துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான்
ஈங்கோய் மலையாரே.
பொ-ரை: அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம்மரத்தின்
பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக்கையில் ஏந்தித் திரியும் அறிவற்ற
புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய
சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.
71. திருநறையூர்ச்
சித்தீச்சுரம் – தக்கேசி
774
நின்றுண்சமண ரிருந்துண்டேரர் நீண்ட போர்வையார்
ஒன்றுமுணரா வூமர்வாயிலுரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச்சித்தீச் சரத்தாரே.
பொ-ரை: நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச் சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள்.
அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல் பவரே! எளிதில் அருள் நல்கும்
சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு
பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்துவிட அக் கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை
அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.
72. திருக்குடந்தைக்காரோணம்
– தக்கேசி
785
நாணாரமணர் நல்லதறியார்
நாளுங் குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார்
பேசே லவரோடும்
சேணார்மதிதோய் மாடமல்கு
செல்வ நெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக்
காரோ ணத்தாரே.
பொ-ரை: சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறியாதவர்கள்.
நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை
பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும்
செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாட வீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை
உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச்
சென்று வழிபடுவீர்களாக.
74. திருப்புறவம் –
தக்கேசி
807
ஆலும்மயிலின் பீலியமண ரறிவில் சிறுதேரர்
கோலும்மொழிக ளொழியக்குழுவுந் தழலு மெழில்வானும்
போலும்வடிவு முடையான்கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும்வகையா லிமையோரேத்த வுமையோ டிருந்தானே.
பொ-ரை: ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும்
மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும்
தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர்
பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
75. திருவெங்குரு –
குறிஞ்சி
818
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர்
பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க
னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக்
கண்டவர்வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொ-ரை: துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்
கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரைமலர் போன்றவளாகிய தாட்சாயணியின் பொருட்டு வலிய
தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும்
அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து
வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற
விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
76. திருஇலம்பையங்கோட்டூர்
– குறிஞ்சி
829
உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி
யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப்
பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை
களிமுகவண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
பொ-ரை: ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த்
திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய
பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என்
உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த்
திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன் போன்று
மலரும் வேங்கையும், மகிழ்ச்சி
நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும்
முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து
காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?
77. திருஅச்சிறுபாக்கம்
– குறிஞ்சி
840
வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள்
நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு
தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய
முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேத நெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார்
மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.
79. திருக்கழுமலம் –
குறிஞ்சி
862
ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு
மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர்
நோம்பலதவமறி யாதவர்நொடிந்த
மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச்
சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத்
தையலாரிடுபலி வையகத்தேற்றுக்
காம்பனதோளியொ டினிதுறைகோயில்
கழுமலநினையநம் வினைகரிசறுமே.
பொ-ரை: இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை
கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க
வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத
தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு
வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும்
தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம்
வினைக்குற்றம் தீரும்.
80. கோயில் –
குறிஞ்சி
873
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
பொ-ரை: மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும்
நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய
உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில்
எழுந்தருளிய நடராசப் பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.
81. சீகாழி –
குறிஞ்சி
880
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
பொ-ரை: உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய
புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த
சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழி நகரைப் பேணித்
தொழுவீர்களாக.
82. திருவீழிமிழலை –
குறிஞ்சி
891
சிக்கார்
துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங்
கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில்
தக்கார்
மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கா
ரவர்வாழும் வீழி மிழலையே.
பொ-ரை: சிக்குப்
பிடித்த காவி உடையையும் சிறிய ஓலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும்
ஏளனம் செய்துசிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை
ஆகும்.
83. திருஅம்பர்மாகாளம்
– குறிஞ்சி
902
மாசூர்
வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா
துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார்
பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட்
கில்லை யிடர்தானே.
பொ-ரை:
அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி,
மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய
புத்தரும், சமணரும் மனம்
கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில்
சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்
வாராது.
84. திருநாகைக்காரோணம்
– குறிஞ்சி
913
நல்லா
ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற
வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை
யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக்
காரோ ணத்தானே.
பொ-ரை:
நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய
இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப்
பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும்
ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
85. திருநல்லம் –
குறிஞ்சி
924
குறியில் சமணோடு
குண்டர் வண்டேரர்
அறிவில்
லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள்
ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள்
பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.
பொ-ரை:
குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு
நாள்களைப் பயனற்றனவாய்ப் போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற் கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த
பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
86. திருநல்லூர் –
குறிஞ்சி
935
பிச்சக்
குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற
நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை
நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட்
கில்லை யிடர்தானே.
பொ-ரை:
மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய்,
நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய
நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.
88. திருஆப்பனூர் –
குறிஞ்சி
957
செய்ய
கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப்
புரிந்த வடியாரை
ஐய மகற்றுவா
னணியாப்ப னூரானைப்
பைய
நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
பொ-ரை: சிவந்த
காவி ஆடை உடுத்த புத்தர்களும், சிறு தடுக்கை
ஆடையாக உடுத்துக் கொண்டு திரியும் சமணர்களும் பொய்பேசிப் புறம் பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப்
போக்கி, மெய்யுணர்வு நல்கும்
அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.
89. திருஎருக்கத்தம்புலியூர்
– குறிஞ்சி
967
புத்த ரருகர்தம்
பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி
தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்த
னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன்
னடியே யடைவோமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி
வடிவினனாய், உமையம்மையாருடன்
நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில்
விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.
90. திருப்பிரமபுரம்
- திருஇருக்குக் குறள்
979
தேர ரமணரைச்,
சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந்,
தோரு முள்ளமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து
மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.
92. திருவீழிமிழலை –
திருஇருக்குக்குறள்
1001
பறிகொள்
தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர்,
பிறிவ தரியதே.
பொ-ரை:
ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது
வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.
93. திருமுதுகுன்றம்
– திருஇருக்குக்குறள்
1012
தேர ரமணரும்,
சேரும் வகையில்லான்
நேரில்
முதுகுன்றை, நீர்நின்
றுள்குமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய
திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின் நீர் நின்று உள்குவீராக.
95. திருஇடைமருர் –
திருஇருக்குக்குறள்
1034
நின்றுண்
சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல,
நன்று மொழியாரே.
பொ-ரை:
நின்றுண்ணும் சமணரும், புத்தரும்
எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர்
எக்காலத்தும் நல்லனவே கூறார்.
96. திருஅன்னியூர் –
திருஇருக்குக்குறள்
1045
குண்டர்
தேரருக்கு, அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை,
விண்டு போகுமே.
பொ-ரை:
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு
செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.
98. திருச்சிராப்பள்ளி
– குறிஞ்சி
1067
நாணாதுடைநீத்
தோர்களுங்கஞ்சி
நாட்காலை
ஊணாப்பகலுண்
டோதுவோர்க
ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர்
பெறுதுமென்பீரெம்
பெருமானார்
சேணார்கோயில்
சிராப்பள்ளிசென்று
சேர்மினே.
பொ-ரை: நாணாது
உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும்
பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான்
உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
99. திருக்குற்றாலம்
– குறிஞ்சி
1078
பெருந்தண்சாரல்
வாழ்சிறைவண்டு
பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச்
செவ்வழிபாடுங்
குற்றாலம்
இருந்துண்டேரு
நின்றுண்சமணு
மெடுத்தார்ப்ப
அருந்தண்மேய
நன்னகர்போலு
மடியீர்காள்.
பொ-ரை:
அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண்
வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம்,
இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய
தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.
100. திருப்பரங்குன்றம்
– குறிஞ்சி
1089
குண்டாய்முற்றுந்
திரிவார்கூறை
மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர்
பேசியபேச்சு
மெய்யல்ல
பண்டானீழன்
மேவியவீசன்
பரங்குன்றைத்
தொண்டாலேத்தத்
தொல்வினை நம்மேல்
நில்லாவே.
பொ-ரை: பருத்த
உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப்
பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில்
வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால்
நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.
101. திருக்கண்ணார்கோயில்
– குறிஞ்சி
1100
தாறிடுபெண்ணைத்
தட்டுடையாருந்
தாமுண்ணும்
சோறுடையார்சொற்
றேறன்மின்வெண்ணூல்
சேர்மார்பன்
ஏறுடையன்பர
னென்பணிவானீள்
சடைமேலோர்
ஆறுடையண்ணல்
சேர்வதுகண்ணார்
கோயிலே.
பொ-ரை: குலைகளை
ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும்,
தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும்
புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும்,
ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத்
தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச்
சென்று தொழுமின்.
103. திருக்கழுக்குன்றம்
– குறிஞ்சி
1120
தேயநின்றான் றிரிபுரங்கங்கை
சடைமேலே
பாயநின்றான்
பலர்புகழ்ந்தேத்த
வுலகெல்லாம்
சாயநின்றான்
வன்சமண்குண்டர்
சாக்கீயர்
காயநின்றான்
காதல்செய்கோயில்
கழுக்குன்றே.
பொ-ரை:
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகி வந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில்
அழியுமாறு நின்றவனும், வலிய சமண்
குண்டர்களும், புத்தர்களும்
கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.
104. திருப்புகலி –
வியாழக்குறிஞ்சி
1131
வெந்துவர்
மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லா
மவையோர் பொருளென்னேல்
வந்தெதி
ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த
புந்தியி
னார்பயிலும் புகலிப் பதிதானே.
பொ-ரை: கொடிய
மருதத் துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும்
துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக்
கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும்
கோயில், பொருந்திய அறிவு உடையவர்
வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.
105. திருஆரூர் – வியாழக்குறிஞ்சி
1141
செந்துவ ராடையினா
ருடைவிட்டு
நின்றுழல்வார்
சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற
வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும்
அரணம்
மெரியூட்டி
யாரூர்த்
தந்திர மாவுடையா
னவனெந் தலைமையனே.
பொ-ரை: செந்துவர்
ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித்
திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது
விடுத்து, இன்புற்று வாழ
விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி
அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம்
தலைவன் என்று வழிபடுவீர்களாக.
106. திருஊறல் –
வியாழக்குறிஞ்சி
1150
பொன்னியல்
சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர்
குண்டர்
என்னு
மிவர்க்கருளா
வீசனிடம் வினவில்
தென்னென
வண்டினங்கள் செறியார்பொழில்
குழ்ந்தழகார்
தன்னை
உன்ன
வினைகெடுப்பான்
றிருவூறலை
யுள்குதுமே.
பொ-ரை: பொன்போன்ற
மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகியஅறியாமையை உடைய சமண்
குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான்
எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த
பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.
107. திருக்கொடிமாடச்செங்குன்றூர்
– வியாழக்குறிஞ்சி
1161
போதியர்
பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும்
பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர்
வரிக்குயில்கள்
கோதிய
தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர்
நின்ற
வேதிய
னைத்தொழநும்
வினையான வீடுமே.
பொ-ரை: போதி
மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை
வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்காட்டிக் கூறும்
புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய
தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த
சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள்
யாவும் அழியும்.
108. திருப்பாதாளீச்சுரம்
– வியாழக்குறிஞ்சி
1172
காலையி
லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா
னவன் றன்னடி யேபரவி
மாலையில்
வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப்
பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.
பொ-ரை: காலையில்
சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ்
மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக்
காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக்
கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
109. திருச்சிரபுரம் –
வியாழக்குறிஞ்சி
1183
வெற்றரை
யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை
புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர
மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர்
சிரபுரமே.
பொ-ரை: ஆடையில்லாத
இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப்
போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக்
கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக்
கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும்
தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.
110. திருஇடைமருதூர் –
வியாழக்குறிஞ்சி
1194
சிந்தையில்
சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை
பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொ
டரவமோவா
எந்தைதன் வளநக
ரிடைமருதே.
பொ-ரை:
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும்
கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு
விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும்
என்று அறிந்து சென்று வழிபடுமின்.
112. திருச்சிவபுரம் –
வியாழக்குறிஞ்சி
1216
மண்டையிற்
குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய
விமலனகர்
பண்டமர் தருபழங்
காவிரியின்
தெண்டிரை
பொருதெழு சிவபுரமே.
பொ-ரை: உண்கலன்
குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய
உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும்
பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.
113. திருவல்லம் –
வியாழக்குறிஞ்சி
1226
அன்றிய வமணர்கள்
சாக்கியர்கள்
குன்றிய வறவுரை
கூறாவண்ணம்
வென்றவன்
புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந்
திருவல்லமே.
பொ-ரை:
கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு,
ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான்
உறைவிடம் திருவல்லமாகும்.
114. திருமாற்பேறு –
வியாழக்குறிஞ்சி
1236
குளித்துணா
வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி
காணலுறார்
முளைத்தவெண்
மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர்
மாற்பேறே.
பொ-ரை:
குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப் பெறார். ஒரு கலைப்
பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய
சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
115. திருஇராமன்நந்தீச்சுரம்
– வியாழக்குறிஞ்சி
1247
தறிபோலாஞ்
சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாம
மறிந்துரைமின்
மறிகையோன்
றன்முடி மணியார்கங்கை
எறிபவ னிராமன
தீச்சரமே.
பொ-ரை: மரத்தால்
இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள்
வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை
ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய
கங்கை நதி அலை, மோதுபவனாய்,
இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று
வழிபடுக.
116. பொது –
திருநீலகண்டம்
1257
சாக்கியப்
பட்டுஞ் சமணுரு வாகி
யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி
யிருதலைப் போகமும்
பற்றும்விட்டார்
பூக்கமழ்
கொன்றைப் புரிசடை யீரடி
போற்றுகின்றோம்
தீக்குழித்
தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
பொ-ரை: நாம்
சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும்
பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப்
பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே!
உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும்
பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
117. திருப்பிரமபுரம்
- மொழிமாற்று – வியாழக்குறிஞ்சி
1269
கையது வெண்குழை
காதது சூல மமணர் புத்தர்
எய்துவர் தம்மை
யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம்
பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர்
பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.
பொ-ரை:
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள்
எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர்.
அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர்
திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம்
உடுத்தவர்.
118. திருப்பருப்பதம்
– வியாழக்குறிஞ்சி
1280
சடங்கொண்ட
சாத்திரத்தார்
சாக்கியர்
சமண்குண்டர்
மடங்கொண்ட
விரும்பியராய்
மயங்கியோர்
பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு
நீர்க்குச்செல்வார்
போதுமின்
குஞ்சரத்தின்
படங்கொண்ட
போர்வையினான்
பருப்பதம்
பரவுதுமே.
பொ-ரை: அறியாமை வயப்பட்ட
சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய
இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச்
செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப்
போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.
119. திருக்கள்ளில் –
வியாழக்குறிஞ்சி
1291
ஆச்சியப் பேய்களோ
டமணர் குண்டர்
பேச்சிவை
நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன்
மல்கு கள்ளில்
தீச்செய்த
சடையண்ணல் திருந்த டியே.
பொ-ரை:
பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக்
கேளாது விடுத்து, பெருமைக்குரிய வள
வயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய
அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.
120. திருஐயாறு -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1302
. மருளுடை
மனத்துவன் சமணர்கண் மாசறா
இருளுடை
யிணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை
மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை
யடிகள்தம் அந்தணை யாறே.
பொ-ரை: தெளிந்த
மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிற ஆடைகளைப்
பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக.
கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
121. திருஇடைமருதூர் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1313
துவருறு விரிதுகி
லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை
நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை
மருதுகை
தொழுதெழும்
அவருறு வினைகெட
லணுகுதல் குணமே.
பொ-ரை: துவர்
ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும்
சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை
உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும்
கூடும்.
122. திருஇடைமருதூர் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1324
குடைமயி லினதழை
மருவிய வுருவினர்
உடைமரு துவரினர்
பலசொல வுறவிலை
அடைமரு திருவினர்
தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமன
நினைவது மெழிலே.
பொ-ரை:
குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும்
பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள் யாவும் தம்மை
வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப் பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது
இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்.
123. திருவலிவலம் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1334
தேனமர் தருமல
ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில
மகழரி யடிமுடி
தானணை யாவுரு
வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி
வலமுறை யிறையே.
பொ-ரை: வானத்தைச்
சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில்
உறையும் இறைவன், தேன் நிறைந்த
தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க
பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காண
முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.
124. திருவீழிமிழலை –
திருவிராகம்
1346
மன்மத னெனவொளி
பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை
யவர்களு மதியிலர்
துன்மதி யமணர்க
டொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை
நினையவ லவரே.
பொ-ரை:
மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர்.
சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய
நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப்
பெறுவார்கள்.
125. திருச்சிவபுரம் –
திருவிராகம்
1357
புத்தரொ டமணர்க
ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில
விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி
லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல்
விழுமிய குணமே.
பொ-ரை:
புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை
விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச்
செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து
வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
126. திருக்கழுமலம் –
திருத்தாளச்சதி
1368
தட்டிட்டே
முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா
தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா
லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா
யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே
யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ
ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால்
வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா
மேலேபாய் கழுமல வளநகரே.
பொ-ரை: தட்டைக்
கையில் ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது
நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம் விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள்
இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப்
பின்புறத்தே, பூசிச்
சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய
புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம்
வெல்லக்கட்டிகளைத் தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனிய சாறு
வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப் பாயும் வளமுடைய கழுமல வளநகராகும்.
127. திருப்பிரமபுரம்
– ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.
128. திருப்பிரமபுரம்
– திருஎழுகூற்றிருக்கை
1382
ஓரா னீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய
நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட
மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ
டொருமதி சூடினை
ஒருதா ளீரயின்
மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி
யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த
நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி
யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால்
வளைய வாங்கி
முப்புரத் தோடு
நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற
வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா
மந்தக் கரணம்
முக்குண மிருவளி
யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை
யொருங்கிய மனத்தோ
டிருபிறப்
போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி
யைவகை வேள்வி
அமைத்தா றங்க
முதலெழுத் தோதி
வரன்முறை
பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும்
வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர்
புகலி யமர்ந்தனை
பொங்குநாற்
கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும்
புதையமேன் மிதந்த
தோணிபுரத்
துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா
யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர்
சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த
விருதிற லரக்கன்
விறல்கெடுத்
தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ
னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை
சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு
மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக்
காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன்
கொச்சையை மெச்சினை
ஆறு பதமு
மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந்
தோன்ற நின்றனை
இருமையி னொருமையு
மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக்
கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்
கவுணிய னறியும் 45
அனைய தன்மையை
யாதலி னின்னை
நினைய வல்லவ
ரில்லைநீ ணிலத்தே.
விஷ்ணுவையும்
வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.
ஓரால்நீழலொண்கழல்
இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது.
விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே
எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற
மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன்
என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.
நாட்டம்
மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும்
புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும்
மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.
இருநதி அரவமோடு
ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும்
ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.
ஒருதாள் ஈரயின்
மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது.
பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா
விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும்
அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை: நற்குணங்கள்
இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை
மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள்
ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
130. திருஐயாறு –
மேகராகக்குறிஞ்சி
1403
குண்டாடு
குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு
மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர்
முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு
புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
பொ-ரை:
இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும்,
வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு
ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும்
கோயிலையுடையது, பூக்களைச்
செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான
மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
131. திருமுதுகுன்றம்
– மேகராகக்குறிஞ்சி
1414
மேனியிற்சீ
வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா
யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா
யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய்
முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.
பொ-ரை: உடம்பில்
துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை
வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக
உள்ளவர்களும், நான்மறைகளை
உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை
வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய
செல்வர்களும், தனித்திருந்து
தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.
132. திருவீழிமிழலை –
மேகராகக்குறிஞ்சி
1425
எண்ணிறந்த
வமணர்களு மிழிதொழில்சேர்
சாக்கியரு
மென்றுந்தன்னை
நண்ணரிய
வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரிய
நாதன்கோயில்
பண்ணமரு
மென்மொழியார் பாலகரைப்
பாராட்டு
மோசைகேட்டு
விண்ணவர்கள்
வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும்
மிழலையாமே.
பொ-ரை: எண்ணற்ற
சமணர்களும், இழிதொழில்
புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும்
தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள்
புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும்
தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள்
விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
125. திருச்சிவபுரம் –
திருவிராகம்
1357
புத்தரொ டமணர்க
ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில
விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி
லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல்
விழுமிய குணமே.
பொ-ரை:
புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை
விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச்
செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து
வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும்
திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின்
ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள்
ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
127. திருப்பிரமபுரம்
– ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ
போதமாயிருக்கும்.
127. திருப்பிரமபுரம்
- ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ
போதமாயிருக்கும்.
128. திருப்பிரமபுரம்
– திருஎழுகூற்றிருக்கை
1382
ஓரா னீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய
நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட
மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ
டொருமதி சூடினை
ஒருதா ளீரயின்
மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி
யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த
நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி
யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால்
வளைய வாங்கி
முப்புரத் தோடு
நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற
வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா
மந்தக் கரணம்
முக்குண மிருவளி
யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை
யொருங்கிய மனத்தோ
டிருபிறப்
போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி
யைவகை வேள்வி
அமைத்தா றங்க
முதலெழுத் தோதி
வரன்முறை
பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும்
வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர்
புகலி யமர்ந்தனை
பொங்குநாற்
கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும்
புதையமேன் மிதந்த
தோணிபுரத்
துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா
யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர்
சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த
விருதிற லரக்கன்
விறல்கெடுத்
தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ
னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை
சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு
மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக்
காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன்
கொச்சையை மெச்சினை
ஆறு பதமு
மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந்
தோன்ற நின்றனை
இருமையி னொருமையு
மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக்
கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்
கவுணிய னறியும் 45
அனைய தன்மையை
யாதலி னின்னை
நினைய வல்லவ
ரில்லைநீ ணிலத்தே.
விஷ்ணுவையும்
வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.
ஓரால்நீழலொண்கழல்
இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது.
விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே
எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற
மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன்
என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.
நாட்டம்
மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும்
புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும்
மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.
இருநதி அரவமோடு
ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும்
ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.
ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம்
நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது. பிரணவமாயிருந்துள்ள ஒரு
காம்பினையும், ஈருகின்ற
கூர்மையினையும், பிர்மா
விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும்
அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை
மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய
அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
130. திருஐயாறு –
மேகராகக்குறிஞ்சி
1403
குண்டாடு
குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு
மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர்
முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு
புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
பொ-ரை: இழிசெயல்களில்
ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு
ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும்
கோயிலையுடையது, பூக்களைச்
செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான
மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
131. திருமுதுகுன்றம்
– மேகராகக்குறிஞ்சி
1414
மேனியிற்சீ
வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா
யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா
யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய்
முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.
பொ-ரை: உடம்பில்
துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை
வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக
உள்ளவர்களும், நான்மறைகளை
உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை
வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய
செல்வர்களும், தனித்திருந்து
தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.
132. திருவீழிமிழலை –
மேகராகக்குறிஞ்சி
1425
எண்ணிறந்த
வமணர்களு மிழிதொழில்சேர் சாக்கியரு மென்றுந்தன்னை
நண்ணரிய
வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரிய நாதன்கோயில்
பண்ணமரு
மென்மொழியார் பாலகரைப் பாராட்டு மோசைகேட்டு
விண்ணவர்கள்
வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலையாமே.
பொ-ரை: எண்ணற்ற
சமணர்களும், இழிதொழில்
புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும்
தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள்
புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப்
பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
133. திருக்கச்சி
ஏகம்பம் – மேகராகக்குறிஞ்சி
1382
ஓரா னீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய
நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட
மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ
டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச்
சூலம் 10
நாற்கான் மான்மறி
யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த
நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி
யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால்
வளைய வாங்கி
முப்புரத் தோடு
நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற
வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா
மந்தக் கரணம்
முக்குண மிருவளி
யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை
யொருங்கிய மனத்தோ
டிருபிறப்
போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி
யைவகை வேள்வி
அமைத்தா றங்க
முதலெழுத் தோதி
வரன்முறை
பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும்
வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர்
புகலி யமர்ந்தனை
பொங்குநாற்
கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும்
புதையமேன் மிதந்த
தோணிபுரத்
துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா
யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர்
சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த
விருதிற லரக்கன்
விறல்கெடுத்
தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த்
துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை
சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு
மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக்
காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன்
கொச்சையை மெச்சினை
ஆறு பதமு
மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந்
தோன்ற நின்றனை
இருமையி னொருமையு
மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக்
கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்
கவுணிய னறியும் 45
அனைய தன்மையை
யாதலி னின்னை
நினைய வல்லவ
ரில்லைநீ ணிலத்தே.
விஷ்ணுவையும்
வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.
ஓரால்நீழலொண்கழல்
இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது.
விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே
எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற
மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன்
என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.
நாட்டம்
மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும்
புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும்
மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.
இருநதி அரவமோடு
ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும்
ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.
ஒருதாள் ஈரயின்
மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது.
பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா
விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும்
அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.
133. திருக்கச்சி
ஏகம்பம் – மேகராகக்குறிஞ்சி
1435
குண்டுபட் டமணா
யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய
கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர்
புரமூன்றும் வெங்கணை யொன்றினா லவியக்
கண்டவன்
கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
பொ-ரை: பருமையான
உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த்
திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி
விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை
எய்து எரித்தழித் தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு
ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.
134. திருப்பறியலூர்
வீரட்டம் – மேகராகக்குறிஞ்சி
1446
சடையன் பிறையன்
சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா
னடியார் பெருமான்
உடையன் புலியி
னுரிதோ லரைமேல்
விடையன்
றிருப்பறியல் வீரட்டத் தானே.
பொ-ரை:
திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன்.
புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.
135. திருப்பராய்த்துறை
– மேகராகக்குறிஞ்சி
1457
திருவிலிச்சில
தேரமணாதர்கள்
உருவிலாவுரை
கொள்ளேலும்
பருவிலாலெயி
லெய்துபராய்த்துறை
மருவினான்றனை
வாழ்த்துமே.
பொ-ரை:
புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும்,
கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய
மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத்
திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.
136. திருத்தருமபுரம்
– யாழ்மூரி
1468
புத்தர்க
டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி
வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க
ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர்
நிகழ்ந் தவர்
சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன
வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலை
யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு
வித்திரளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந்
தடம்பொழிற் றருமபு ரம்பதியே.
பொ-ரை:
புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய
கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை
உடையவர்களும், புலவர்கள்
பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப் பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி
பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள்
இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி,
தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து
பொருந்தும் தருமபுரம் ஆகும்.
82. திருவீழிமிழலை –
குறிஞ்சி
891
சிக்கார்
துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங்
கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில்
தக்கார்
மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கா
ரவர்வாழும் வீழி மிழலையே.
பொ-ரை: சிக்குப்
பிடித்த காவி உடையையும் சிறிய ஓலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும்
ஏளனம் செய்துசிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை
ஆகும்.
83. திருஅம்பர்மாகாளம்
– குறிஞ்சி
902
மாசூர்
வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா
துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார்
பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட்
கில்லை யிடர்தானே.
பொ-ரை:
அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி,
மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய
புத்தரும், சமணரும் மனம்
கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில்
சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்
வாராது.
84. திருநாகைக்காரோணம்
– குறிஞ்சி
913
நல்லா
ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற
வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை
யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக்
காரோ ணத்தானே.
பொ-ரை:
நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய
இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப்
பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும்
ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
85. திருநல்லம் –
குறிஞ்சி
924
குறியில் சமணோடு
குண்டர் வண்டேரர்
அறிவில்
லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான்
பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள்
பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.
பொ-ரை:
குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு
நாள்களைப் பயனற்றனவாய்ப் போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற் கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த
பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
86. திருநல்லூர் –
குறிஞ்சி
935
பிச்சக்
குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற
நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை
நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட்
கில்லை யிடர்தானே.
பொ-ரை:
மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய்,
நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய
நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.
88. திருஆப்பனூர் –
குறிஞ்சி
957
செய்ய
கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப்
புரிந்த வடியாரை
ஐய மகற்றுவா
னணியாப்ப னூரானைப்
பைய
நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
பொ-ரை: சிவந்த
காவி ஆடை உடுத்த புத்தர்களும், சிறு தடுக்கை
ஆடையாக உடுத்துக் கொண்டு திரியும் சமணர்களும் பொய்பேசிப் புறம் பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப்
போக்கி, மெய்யுணர்வு நல்கும்
அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.
89. திருஎருக்கத்தம்புலியூர்
– குறிஞ்சி
967
புத்த ரருகர்தம்
பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ்
சோதி யுமையோடும்
நித்த
னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன்
னடியே யடைவோமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி
வடிவினனாய், உமையம்மையாருடன்
நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில்
விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.
90. திருப்பிரமபுரம்
- திருஇருக்குக் குறள்
979
தேர ரமணரைச்,
சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந்,
தோரு முள்ளமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து
மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.
92. திருவீழிமிழலை –
திருஇருக்குக்குறள்
1001
பறிகொள்
தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர்,
பிறிவ தரியதே.
பொ-ரை:
ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது
வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.
93. திருமுதுகுன்றம்
– திருஇருக்குக்குறள்
1012
தேர ரமணரும்,
சேரும் வகையில்லான்
நேரில்
முதுகுன்றை, நீர்நின்
றுள்குமே.
பொ-ரை: புத்தர்
சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய
திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின் நீர் நின்று உள்குவீராக.
95. திருஇடைமருர் –
திருஇருக்குக்குறள்
1034
நின்றுண்
சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல,
நன்று மொழியாரே.
பொ-ரை:
நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும்
இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும்
நல்லனவே கூறார்.
96. திருஅன்னியூர் –
திருஇருக்குக்குறள்
1045
குண்டர்
தேரருக்கு, அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை,
விண்டு போகுமே.
பொ-ரை:
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு
செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.
98. திருச்சிராப்பள்ளி
– குறிஞ்சி
1067
நாணாதுடைநீத்
தோர்களுங்கஞ்சி
நாட்காலை
ஊணாப்பகலுண்
டோதுவோர்க
ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர்
பெறுதுமென்பீரெம்
பெருமானார்
சேணார்கோயில்
சிராப்பள்ளிசென்று
சேர்மினே.
பொ-ரை: நாணாது
உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும்
பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான்
உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
99. திருக்குற்றாலம்
– குறிஞ்சி
1078
பெருந்தண்சாரல்
வாழ்சிறைவண்டு
பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச்
செவ்வழிபாடுங்
குற்றாலம்
இருந்துண்டேரு
நின்றுண்சமணு
மெடுத்தார்ப்ப
அருந்தண்மேய
நன்னகர்போலு
மடியீர்காள்.
பொ-ரை:
அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண்
வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம்,
இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய
தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.
100. திருப்பரங்குன்றம்
– குறிஞ்சி
1089
குண்டாய்முற்றுந்
திரிவார்கூறை
மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர்
பேசியபேச்சு
மெய்யல்ல
பண்டானீழன்
மேவியவீசன்
பரங்குன்றைத்
தொண்டாலேத்தத்
தொல்வினை நம்மேல்
நில்லாவே.
பொ-ரை: பருத்த
உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப்
பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில்
வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால்
நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.
101. திருக்கண்ணார்கோயில்
– குறிஞ்சி
1100
தாறிடுபெண்ணைத்
தட்டுடையாருந்
தாமுண்ணும்
சோறுடையார்சொற்
றேறன்மின்வெண்ணூல்
சேர்மார்பன்
ஏறுடையன்பர
னென்பணிவானீள்
சடைமேலோர்
ஆறுடையண்ணல்
சேர்வதுகண்ணார்
கோயிலே.
பொ-ரை: குலைகளை
ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும்,
தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும்
புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும்,
ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத்
தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச்
சென்று தொழுமின்.
103. திருக்கழுக்குன்றம்
– குறிஞ்சி
1120
தேயநின்றான் றிரிபுரங்கங்கை
சடைமேலே
பாயநின்றான்
பலர்புகழ்ந்தேத்த
வுலகெல்லாம்
சாயநின்றான்
வன்சமண்குண்டர்
சாக்கீயர்
காயநின்றான்
காதல்செய்கோயில்
கழுக்குன்றே.
பொ-ரை:
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகி வந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில்
அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும்,
புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய
சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.
104. திருப்புகலி –
வியாழக்குறிஞ்சி
1131
வெந்துவர்
மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லா
மவையோர் பொருளென்னேல்
வந்தெதி
ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த
புந்தியி
னார்பயிலும் புகலிப் பதிதானே.
பொ-ரை: கொடிய
மருதத் துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும்
துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக்
கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும்
கோயில், பொருந்திய அறிவு உடையவர்
வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.
105. திருஆரூர் – வியாழக்குறிஞ்சி
1141
செந்துவ ராடையினா
ருடைவிட்டு
நின்றுழல்வார்
சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற
வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும்
அரணம்
மெரியூட்டி
யாரூர்த்
தந்திர மாவுடையா
னவனெந் தலைமையனே.
பொ-ரை: செந்துவர்
ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித்
திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது
விடுத்து, இன்புற்று வாழ
விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி
அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம்
தலைவன் என்று வழிபடுவீர்களாக.
106. திருஊறல் –
வியாழக்குறிஞ்சி
1150
பொன்னியல்
சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர்
குண்டர்
என்னு
மிவர்க்கருளா
வீசனிடம் வினவில்
தென்னென
வண்டினங்கள் செறியார்பொழில்
குழ்ந்தழகார்
தன்னை
உன்ன
வினைகெடுப்பான்
றிருவூறலை
யுள்குதுமே.
பொ-ரை: பொன்போன்ற
மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகியஅறியாமையை உடைய சமண்
குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான்
எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த
பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.
107. திருக்கொடிமாடச்செங்குன்றூர்
– வியாழக்குறிஞ்சி
1161
போதியர்
பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும்
பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர்
வரிக்குயில்கள்
கோதிய
தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர்
நின்ற
வேதிய
னைத்தொழநும்
வினையான வீடுமே.
பொ-ரை: போதி
மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை
வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்காட்டிக் கூறும்
புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய
தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த
சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள்
யாவும் அழியும்.
108. திருப்பாதாளீச்சுரம்
– வியாழக்குறிஞ்சி
1172
காலையி
லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா
னவன் றன்னடி யேபரவி
மாலையில்
வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப்
பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.
பொ-ரை: காலையில்
சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ்
மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக்
காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக்
கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
109. திருச்சிரபுரம் –
வியாழக்குறிஞ்சி
1183
வெற்றரை
யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை
புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர
மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர்
சிரபுரமே.
பொ-ரை: ஆடையில்லாத
இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப்
போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக்
கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக்
கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும்
தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.
110. திருஇடைமருதூர் –
வியாழக்குறிஞ்சி
1194
சிந்தையில்
சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை
பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொ
டரவமோவா
எந்தைதன் வளநக
ரிடைமருதே.
பொ-ரை:
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும்
கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு
விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும்
என்று அறிந்து சென்று வழிபடுமின்.
112. திருச்சிவபுரம் –
வியாழக்குறிஞ்சி
1216
மண்டையிற்
குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய
விமலனகர்
பண்டமர் தருபழங்
காவிரியின்
தெண்டிரை
பொருதெழு சிவபுரமே.
பொ-ரை: உண்கலன்
குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய
உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும்
பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.
113. திருவல்லம் –
வியாழக்குறிஞ்சி
1226
அன்றிய வமணர்கள்
சாக்கியர்கள்
குன்றிய வறவுரை
கூறாவண்ணம்
வென்றவன்
புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந்
திருவல்லமே.
பொ-ரை:
கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு,
ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான்
உறைவிடம் திருவல்லமாகும்.
114. திருமாற்பேறு –
வியாழக்குறிஞ்சி
1236
குளித்துணா
வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி
காணலுறார்
முளைத்தவெண்
மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர்
மாற்பேறே.
பொ-ரை:
குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப் பெறார். ஒரு கலைப்
பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது
வளநகர், மாற்பேறாகும்.
115. திருஇராமன்நந்தீச்சுரம்
– வியாழக்குறிஞ்சி
1247
தறிபோலாஞ்
சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாம
மறிந்துரைமின்
மறிகையோன்
றன்முடி மணியார்கங்கை
எறிபவ னிராமன
தீச்சரமே.
பொ-ரை: மரத்தால்
இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள்
வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை
ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய
கங்கை நதி அலை, மோதுபவனாய்,
இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று
வழிபடுக.
116. பொது – திருநீலகண்டம்
1257
சாக்கியப்
பட்டுஞ் சமணுரு வாகி
யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி
யிருதலைப் போகமும்
பற்றும்விட்டார்
பூக்கமழ்
கொன்றைப் புரிசடை யீரடி
போற்றுகின்றோம்
தீக்குழித்
தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
பொ-ரை: நாம்
சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும்
பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப்
பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே!
உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும்
பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
117. திருப்பிரமபுரம்
- மொழிமாற்று – வியாழக்குறிஞ்சி
1269
கையது வெண்குழை
காதது சூல மமணர் புத்தர்
எய்துவர் தம்மை
யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம்
பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர்
பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.
பொ-ரை:
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள்
எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர்.
அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர்
திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம்
உடுத்தவர்.
118. திருப்பருப்பதம்
– வியாழக்குறிஞ்சி
1280
சடங்கொண்ட
சாத்திரத்தார்
சாக்கியர்
சமண்குண்டர்
மடங்கொண்ட
விரும்பியராய்
மயங்கியோர்
பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு
நீர்க்குச்செல்வார்
போதுமின்
குஞ்சரத்தின்
படங்கொண்ட
போர்வையினான்
பருப்பதம்
பரவுதுமே.
பொ-ரை: அறியாமை வயப்பட்ட
சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய
இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச்
செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப்
போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.
119. திருக்கள்ளில் –
வியாழக்குறிஞ்சி
1291
ஆச்சியப் பேய்களோ
டமணர் குண்டர்
பேச்சிவை
நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன்
மல்கு கள்ளில்
தீச்செய்த
சடையண்ணல் திருந்த டியே.
பொ-ரை:
பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக்
கேளாது விடுத்து, பெருமைக்குரிய வள
வயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய
அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.
120. திருஐயாறு -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1302
. மருளுடை
மனத்துவன் சமணர்கண் மாசறா
இருளுடை யிணைத்துவர்ப்
போர்வையி னார்களும்
தெருளுடை
மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை
யடிகள்தம் அந்தணை யாறே.
பொ-ரை: தெளிந்த
மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிற ஆடைகளைப்
பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக.
கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
121. திருஇடைமருதூர் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1313
துவருறு விரிதுகி
லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை
நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை
மருதுகை
தொழுதெழும்
அவருறு வினைகெட
லணுகுதல் குணமே.
பொ-ரை: துவர்
ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும்
சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை
உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும்
கூடும்.
122. திருஇடைமருதூர் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1324
குடைமயி லினதழை
மருவிய வுருவினர்
உடைமரு துவரினர்
பலசொல வுறவிலை
அடைமரு திருவினர்
தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமன
நினைவது மெழிலே.
பொ-ரை:
குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும்
பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள் யாவும் தம்மை
வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப் பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது
இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்.
123. திருவலிவலம் -
திருவிராகம் – வியாழக்குறிஞ்சி
1334
தேனமர் தருமல
ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில
மகழரி யடிமுடி
தானணை யாவுரு
வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி
வலமுறை யிறையே.
பொ-ரை: வானத்தைச்
சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில்
உறையும் இறைவன், தேன் நிறைந்த
தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க
பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காண
முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.
124. திருவீழிமிழலை –
திருவிராகம்
1346
மன்மத னெனவொளி
பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை
யவர்களு மதியிலர்
துன்மதி யமணர்க
டொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை
நினையவ லவரே.
பொ-ரை:
மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர்.
சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய
நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப்
பெறுவார்கள்.
125. திருச்சிவபுரம் –
திருவிராகம்
1357
புத்தரொ டமணர்க
ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில
விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி
லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல்
விழுமிய குணமே.
பொ-ரை:
புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை
விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச்
செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து
வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
126. திருக்கழுமலம் –
திருத்தாளச்சதி
1368
தட்டிட்டே
முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா
தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா
லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா
யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே
யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ
ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால்
வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா
மேலேபாய் கழுமல வளநகரே.
பொ-ரை: தட்டைக்
கையில் ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது
நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம் விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள்
இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப்
பின்புறத்தே, பூசிச்
சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய
புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம்
வெல்லக்கட்டிகளைத் தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனிய சாறு
வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப் பாயும் வளமுடைய கழுமல வளநகராகும்.
127. திருப்பிரமபுரம்
– ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.
128. திருப்பிரமபுரம்
– திருஎழுகூற்றிருக்கை
1382
ஓரா னீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய
நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட
மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ
டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச்
சூலம் 10
நாற்கான் மான்மறி
யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த
நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி
யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால்
வளைய வாங்கி
முப்புரத் தோடு
நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற
வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா
மந்தக் கரணம்
முக்குண மிருவளி
யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை
யொருங்கிய மனத்தோ
டிருபிறப்
போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி
யைவகை வேள்வி
அமைத்தா றங்க
முதலெழுத் தோதி
வரன்முறை
பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும்
வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர்
புகலி யமர்ந்தனை
பொங்குநாற்
கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும்
புதையமேன் மிதந்த
தோணிபுரத்
துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா
யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர்
சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த
விருதிற லரக்கன்
விறல்கெடுத்
தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ
னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை
சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு
மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக்
காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன்
கொச்சையை மெச்சினை
ஆறு பதமு
மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந்
தோன்ற நின்றனை
இருமையி னொருமையு
மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக்
கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்
கவுணிய னறியும் 45
அனைய தன்மையை
யாதலி னின்னை
நினைய வல்லவ
ரில்லைநீ ணிலத்தே.
விஷ்ணுவையும்
வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.
ஓரால்நீழலொண்கழல்
இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது.
விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே
எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற
மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன்
என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.
நாட்டம்
மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும்
புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும்
மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.
இருநதி அரவமோடு
ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும்
ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.
ஒருதாள் ஈரயின்
மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது.
பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா
விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும்
அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை: நற்குணங்கள்
இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை
மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள்
ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
130. திருஐயாறு – மேகராகக்குறிஞ்சி
1403
குண்டாடு
குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு
மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர்
முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு
புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
பொ-ரை: இழிசெயல்களில்
ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு
ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும்
கோயிலையுடையது, பூக்களைச்
செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான
மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
131. திருமுதுகுன்றம்
– மேகராகக்குறிஞ்சி
1414
மேனியிற்சீ
வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா
யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா
யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய்
முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.
பொ-ரை: உடம்பில்
துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை
வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக
உள்ளவர்களும், நான்மறைகளை
உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற
மௌனிகளும், முனிவர்களாகிய
செல்வர்களும், தனித்திருந்து
தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.
132. திருவீழிமிழலை –
மேகராகக்குறிஞ்சி
1425
எண்ணிறந்த
வமணர்களு மிழிதொழில்சேர்
சாக்கியரு
மென்றுந்தன்னை
நண்ணரிய
வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரிய
நாதன்கோயில்
பண்ணமரு
மென்மொழியார் பாலகரைப்
பாராட்டு
மோசைகேட்டு
விண்ணவர்கள்
வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும்
மிழலையாமே.
பொ-ரை: எண்ணற்ற
சமணர்களும், இழிதொழில்
புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும்
தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள்
புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும்
தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள்
விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
125. திருச்சிவபுரம் –
திருவிராகம்
1357
புத்தரொ டமணர்க
ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில
விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி
லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல்
விழுமிய குணமே.
பொ-ரை:
புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை
விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச்
செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து
வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும்
திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின்
ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள்
ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
127. திருப்பிரமபுரம்
– ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ
போதமாயிருக்கும்.
127. திருப்பிரமபுரம்
- ஏகபாதம்
1380
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண்
ணலைக்கூட கிலாருடன் மூடரே.
கு-ரை:
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும்
மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப்
பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது
நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய
நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே
பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும்
திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ
போதமாயிருக்கும்.
128. திருப்பிரமபுரம்
– திருஎழுகூற்றிருக்கை
1382
ஓரா னீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய
நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட
மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ
டொருமதி சூடினை
ஒருதா ளீரயின்
மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி
யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த
நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி
யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால்
வளைய வாங்கி
முப்புரத் தோடு
நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற
வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா
மந்தக் கரணம்
முக்குண மிருவளி
யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை
யொருங்கிய மனத்தோ
டிருபிறப்
போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி
யைவகை வேள்வி
அமைத்தா றங்க
முதலெழுத் தோதி
வரன்முறை
பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும்
வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர்
புகலி யமர்ந்தனை
பொங்குநாற்
கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும்
புதையமேன் மிதந்த
தோணிபுரத்
துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா
யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர்
சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த
விருதிற லரக்கன்
விறல்கெடுத்
தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ
னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை
சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு
மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக்
காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன்
கொச்சையை மெச்சினை
ஆறு பதமு
மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந்
தோன்ற நின்றனை
இருமையி னொருமையு
மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக்
கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்
கவுணிய னறியும் 45
அனைய தன்மையை
யாதலி னின்னை
நினைய வல்லவ
ரில்லைநீ ணிலத்தே.
விஷ்ணுவையும்
வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.
ஓரால்நீழலொண்கழல்
இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது.
விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே
எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற
மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன்
என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.
நாட்டம்
மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும்
புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும்
மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.
இருநதி அரவமோடு
ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும்
ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.
ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம்
நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது. பிரணவமாயிருந்துள்ள ஒரு
காம்பினையும், ஈருகின்ற
கூர்மையினையும், பிர்மா
விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும்
அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.
129. திருக்கழுமலம் –
மேகராகக்குறிஞ்சி
1392
குணமின்றிப்
புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ்
சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும்
வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு
மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.
பொ-ரை:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும்
கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை
மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய
அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
130. திருஐயாறு